×

காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு: தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: தெலங்கானாவில் முன்னாள் எம்பியும், காங்கிரஸ் வேட்பாளருமான பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று அதிகாலை 3 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநில முன்னாள் எம்பி பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ். இவர் பிஆர்எஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு பாலேரு தொகுதியில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பு வழங்கியது. இவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருந்தார்.

இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் கம்மத்தில் உள்ள பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் உடனடியாக ஸ்ரீனிவாஸ் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்களின் வீடுகள் என 8 இடங்களில் பெங்களூருவில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சொத்து ஆவணங்கள், வங்கி கணக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

பாஜக, பிஆர்எஸ் கட்சி இணைந்து தனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீனிவாஸ் கூறியிருந்தார். அதேபோல் இன்று வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வீட்டில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது அரசியல் ரீதியாக பழிவாங்கும் செயல் என பாஜக மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு: தெலங்கானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,House ,Telangana ,Tirumala ,Ponguleti Srinivas ,Income Tax ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...